ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலுக்குள் பக்தர்கள் நெரிசல் அதிகளவில் இருந்தது.தமிழகத்தில் மாநாகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது. தேர்தல் நடவடிக்கையால் கடந்த வாரம் முழுவதும் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்திருந்தது. ராமேஸ்வரம் கோயில், அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் பக்தர்களின்றி காற்றாடியது. இந்நிலையில் நேற்று திடீரென்று ராமேஸ்வரத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. அக்னிதீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதாலும், மாசி களறி திருவிழா நாட்கள் என்பதாலும் நேற்று அதிகாலை முதலே வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வாகனங்களில் ராமேஸ்வரம் வரத்துவங்கினர். இதனால் நேற்று காலை அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பாக புனித நீராடியதால், கடற்கரை முழுவதும் மக்கள் நெருக்கடியாக இருந்தது. கடலில் தீர்த்தமாடிய பக்தர்கள் வடக்கு கோபுர வாயில் தீர்த்தக்கவுன்டர் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி மணிக்கணக்கில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலுக்குள்ளும் பக்தர்கள் நெருக்கடி அதிகரித்து காணப்பட்டது.